சென்னை: அதிமுக நிர்வாகி, தொண்டர்களால் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படாது. சசிகலா குடும்பத்தினரால் மட்டுமே களங்கம் ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அமைச்சர் ஜெயக்குமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேற்று சந்தித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதியில் அதிமுக போட்டியிட்டு, இந்த ஆண்டின், முதல் வெற்றியை பெற்றிடும். வியாபாரிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் அடிப்படையில், ஜிஎஸ்டி கூட்டத்தில், வரியை குறைப்பது குறித்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக 23 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாதமும் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, சிறுகுறு வணிகர்களுக்கு வரியை குறைக்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.