புதுடெல்லி: பிங்க் வழித்தடத்தின் லஜ்பத் நகர் மற்றும் மயூர் விகார் இடையிலான மெட்ரோ சேவையின் அனைத்து சோதனைகளும் முடிவடைந்ததையடுத்து, டிசம்பர் 31ல் சேவை தொடங்கப்படுகிறது. டெல்லியில் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து சேவையை எளிதாக்க மெட்ரோ விரிவாக்கப்பணிகளை டெல்லி மெட்ரோ நிறுவனம் விரைவுபடுத்தி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பிங்க் வழித்தடத்தின் லஜ்பத் நகர் மற்றும் மயூர் விகார் இடையே பணிகள் நடைபெற்று வந்தன. இறுதிகட்ட பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்திற்கு தயாரானது. இதையடுத்து, 9.7 கி.மீ தூரமுள்ள இந்த புதிய வழித்தடத்தில் பாதுகாப்பு சோதனகளும் நடத்தி முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் திங்கட்கிழமை சான்று வழங்கினார். இதையடுத்து, வரும் டிசம்பர் 31ம் தேதி பிங்க வழித்தடத்தில் இந்த சேவை தொடங்கி வைக்கப்படுகிறது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை தனிப்பொறுப்பு அமைச்சர் ஹர்திப் சிங் புரி மற்றும் மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் இணைந்து 31ம் தேதியன்று காலை 11.00 மணிக்கு மெட்ரோ பவனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள நிகழ்ச்சியில் மெட்ரோசேவையை தொடங்கி வைக்கிறார்கள். அதே தினம் மாலை 4.00 மணிக்கு பயணிகளுக்கான முதல் சேவை அந்த வழித்தடத்தில் தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.