சென்னை: “தேர்தல் பிரசாரம் தொடங்க வரும் பிரதமர் மோடியின் தந்திரம் தமிழகத்தில் பலிக்காது” என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கக்கன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.விஸ்வநாதன், செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர்கள் அரும்பாக்கம் க.வீரபாண்டியன், சிவராஜ சேகர் மற்றும் பி.வி.தமிழ்செல்வன், இமயாகக்கன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்தொடர்ந்து திருநாவுக்கரசர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பாஜவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. ஒரு இடம் கூட கிடைக்காத தமிழகத்தில் இருந்து மோடி பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்க்க வரவில்லை. பாதிப்புக்கு ஏற்ப நிவாரண உதவி வழங்கவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு வருகிறார். இது தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற மோடி செய்யும் தந்திரம் . ஆனால் அவரது தந்திரம் பலிக்கப்போவதில்லை. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதற்கு ஒரு உதாரணம். பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் என்று திமுக முன் மொழிந்ததை எந்த கட்சியும் எதிர்க்கவில்லை. தக்க தருணத்தில் எல்லா கட்சியினரும் ஏற்றுக் கொள்வார்கள்.