பேராவூரணி: ஓய்வின்றி வேலை செய்ய அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்ததால் பேராவூரணி பணிமனை ஓய்வறையில் அரசு பேருந்து டிரைவர் மண்ணெண்ணெயை குடித்தும், உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றுபவர் சக்திவேல் (42). இவர் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பணி செய்துவிட்டு நேற்று மதியம் 12 மணியளவில் பேராவூரணி பணிமனையில் உள்ள ஓய்வெடுத்தார். அப்போது, கிளை மேலாளர் ரமேஷ் மற்றும் பணிதள பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் வந்து வேறு ஒரு பேருந்தில் டிரைவர் பணிக்கு செல்லுமாறு கூறினர். அதற்கு 2 நாட்களாக ஓய்வின்றி பணி செய்வதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று சக்திவேல் கூறினார்.
இதை ஏற்க மறுத்து பணிக்கு செல்லாவிட்டால் சஸ்பெண்ட் செய்வோம் என்று மிரட்டினர். இதனால் மனவேதனை அடைந்த டிரைவர் சக்திவேல், பணிமனையிலேயே மண்ணெண்ெணயை குடித்தும், தனது உடலில் ஊற்றியும் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், சக்திவேலை தடுத்து நிறுத்தி பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பேராவூரணி பேருந்து நிலையத்தில் பஸ்களை நிறுத்தி விட்டு டிரைவர், கண்டக்டர்கள் மருத்துவமனைக்கு சென்று சக்திவேலை சந்தித்து ஆறுதல் கூறினர். இதனால் பேராவூரணி நகருக்குள் ஒரு மணி நேரமாக பஸ்கள் இயங்கவில்லை. உயர் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி