புதுடெல்லி: ரபேல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிப் போயின. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மக்களவை கூடியதுமே ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னிறுத்தி ஆளும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் 12 மணிக்கு கூடியது.