அக்ரா: கானா நாட்டில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்து வைத்த மகாத்மா காந்தியின் சிலை திடீரென அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் சில ஆண்டுகளுக்கு முன் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக இருந்தபோது பயணம் செய்தார். அப்போது, அக்ரா நகரில் உள்ள கானா பல்கலைக் கழகத்தில் மகாத்மா காந்திய சிலையை திறந்து வைத்தார். உலக அமைதி சின்னமாக இது திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பல்கலைக் கழக பேராசிரியர்கள் காந்தி சிலையை அகற்ற வேண்டும் என நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, ‘கருப்பின ஆப்பிரிக்கர்களை விட, இந்தியர்கள் சிறந்தவர்கள்’ என காந்தி எழுதிய கருத்துகளை மேற்கோள்காட்டி சிலையை அகற்ற பேராசிரியர்கள் வலியுறுத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவில் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த காந்தி சிலை திடீரென அகற்றப்பட்டது. உலகின் அகிம்சைவாதியாக பார்க்கப்படும் மகாத்மா காந்தியின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கானா வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘ சிலை அகற்றப்பட்ட சம்பவம் பல்கலைக் கழகத்தின் உள்விவகாரம்’’ என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி