தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சீனா, மலேசியாவிற்கு நேரடியாக பெரிய கன்டெய்னர் கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சரக்கு பெட்டகங்கள் சிறிய கப்பல்களில் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்றிச்செல்லப்பட்டு, அங்கிருந்து பிற நாடுகளுக்கு பெரிய கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் காலம் விரயமாவதுடன், குறிப்பிட்ட நேரத்தில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்வதில் தாமதமும், அதிக செலவும் ஏற்படுவதாக ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்து வந்தன. இந்நிலையில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தனியார் சரக்கு பெட்டக தளத்தில் இருந்து முதல் முறையாக சீனா மற்றும் மலேசிய நாடுகளுக்கு நேரடி கப்பல் சேவை நேற்று முதல் துவங்கியது. மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சியில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.