திருப்பதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமையில் கோயிலில் ஆழ்வார்  திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடத்தப்படும். அதன்படி வரும் 18ம் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. மறுநாள் 19ம் தேதி துவாதசி அன்றும் சொர்க்கவாசல் வழியாக  பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி நேற்று காலை சுப்ரபாத சேவையுடன் சுவாமி துயில் எழுப்பப்பட்டு, கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.

மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாதா, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து  இடங்களிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தது. பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூணம், மஞ்சள், கிச்சலிக்கட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதில் கோயில் ஜீயர்கள், தேவஸ்தான இணை  செயல் அலுவலர் சீனிவாசராஜு, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதையொட்டி நேற்று காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை. பின்னர் காலை 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: