மைசூரு வெல்லத்துக்கு டிமாண்ட்: கேரளாவில் பழநி வெல்லத்துக்கு மவுசு குறைந்தது

பழநி: கேரளாவிற்கு மைசூர் வெல்லம் வரத்து அதிகரித்துள்ளதால், பழநி வெல்லத்துக்கு மவுசு குறைந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதி விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். இங்கு நீர்ப்பாசனம் நன்றாக உள்ள பகுதிகளில் நெல் மற்றும் கரும்பு பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் கரும்பு பெரும்பாலும் அமராவதி சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி திருவிழா நெருங்கி வருகிறது. இதனால் அரவணைபாயாசம் மற்றும் பொங்கலுக்கு அதிகளவில் வெல்லம் தேவைப்படுகின்றன. இதன் காரணமாக பழநி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி, மானூர், பாப்பம்பட்டி, கொழுமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் அதிகளவு கொண்டு செல்லப்படுகின்றன.

 

தற்போது கேரள மாநிலத்தில் அதிகளவில் மைசூர் வெல்லம் கொண்டு வரப்படுகிறது. இதனால் கேரளாவில் பழநி வெல்லத்திற்கு மவுசு குறைந்துள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து ராசாபுரத்தை சேர்ந்த பிரபு கூறுகையில், பழநி பகுதியில் தயார் செய்யப்படும் வெல்லம் ரோஸ்வுட், பொன்ரோஸ்வுட், செங்காள்ரோஸ்வுட் என்று தரத்தின் அடிப்படையில் 2 வகையாக பிரிக்கப்படுகிறது. 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் முறையே ரூ.ஆயிரத்து 150, ரூ.ஆயிரத்து 50, ரூ.ஆயிரம் ஆகிய விலைகளில் விற்கப்படுகிறது. முன்பு கேரள மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்தே அதிகளவில் வெல்லம் கொண்டு செல்லப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கேரளாவிற்கு அதிகளவு வெல்லம் கொண்டு வரப்படுகிறது. இதனால் பழநி பகுதியில் இருந்து கொண்டு செல்லப்படும் வெல்லத்தின் அளவு குறைந்துள்ளது. ஜனவரி மாதம் துவங்கியவுடன் வெல்லம் விற்பனை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: