விழுப்புரம்: விழுப்புரம்-தஞ்சை இடையே ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் ரயில்களின் வேகம் அதிகரிக்கும். இது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம்-கடலுார் துறைமுகம்-மயிலாடுதுறை-தஞ்சை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 286 கி.மீ மின் மயமாக்கப்படாததால் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்பாதையை மின்மயமாக்க கடந்த 2016ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து 2017ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இப்பணியை ரயில் விகாஸ் நிகாம் என்கிற ஆர்.வி.என்.எல் நிறுவனம் மேற்கொள்ள ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து ரூ.239 கோடி மதிப்பீட்டில் மின்மயமாக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
தற்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை மார்க்கத்தில் மின்மயமாக்குவதையொட்டி மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விழுப்புரம், சேர்ந்தனூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் மின்கம்பங்கள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது. தற்போது மின் கம்பிகள் பொருத்தும் பணி துவங்கப்பட உள்ளது. சில மாதங்களில் இப்பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்தாண்டு முதல் இந்த மார்க்கத்தில் மின்சார ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்பணிகளை கடந்த மாதம் கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர். இப்பாதை மின்மயமாக்கும் பணி முடிந்தால், ரயில்களின் வேகம் அதிகரிக்கும். சரக்கு போக்குவரத்தும் அதிகரிக்கும். கடலூர், காரைக்கால் துறைமுகங்கள் பெரிய அளவில் பயன்பெறும், என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்களின் வேகம் அதிகரிக்கும், கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்ற தகவல் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி