திருவொற்றியூர்: வீட்டில் மசாஜ் சென்டர் நடத்தி தொழிலதிபரிடம் உல்லாசமாக இருந்து நகை மற்றும் பணத்தை பறித்த 2 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மாதவரம் அடுத்த பெரிய மாத்தூர், பக்தவச்சலம் நகரை சேர்ந்தவர் நிர்மலா (27). கணவரை பிரிந்து வாழும் இவர், கடந்த சில ஆண்டுகளாக அண்ணாநகரில் உள்ள தனியார் மசாஜ் சென்டரில் வேலை பார்த்தார். அப்போது, இவருக்கு கொடுங்கையூரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன், நிர்மலா வேலையை விட்டுவிட்டு, தனது வீட்டிலேயே மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். கடந்த வாரம் நிர்மலாவுக்கு போன் செய்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, ‘தனக்கு மசாஜ் செய்ய வேண்டும்,’ என கேட்டுள்ளார். அப்போது, தனது வீட்டுக்கு வரும்படி நிர்மலா அவருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, நிர்மலாவின் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி சென்றுள்ளார். அவரிடம் தனது தோழி ஷீலா (30), ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (32) ஆகியோரை நிர்மலா அறிமுகம் செய்துள்ளார். பின்னர், 4 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் நிர்மலா, ஷீலாவுடன் கிருஷ்ணமூர்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். சிறிது நேரத்தில், 4 பேர் கொண்ட கும்பல் நிர்மலாவின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து, கத்தி முனையில் மிரட்டி, கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து 2 சவரன் நகை மற்றும் 70 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றது.