சென்னை: ஒருதலைக்காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தனியார் துணிக்கடையில் வேலை செய்தமெர்சி என்ற இளம்பெண் காதலிக்க மறுத்ததால் ரவீந்திரன் என்ற வாலிபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒருதலைக்காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் இத்தகைய வெறிச்செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. மெர்சியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.படுகொலை செய்யப்படும் அளவுக்கு மெர்சி எந்தக் குற்றத்தையும், பாவத்தையும் இழைக்கவில்லை. இத்தகைய கொடூரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் தங்களின் பெண்களை படிக்கவோ, பணிக்கோ அனுப்பத் தயங்குகின்றனர். ‘‘பெண்களுக்கென்று எந்த விருப்பமும் இருக்கக்கூடாது. அவர்களிடம் காதலைச் சொன்னால் உடனே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்தப் பெண்கள் வாழத் தகுதியற்றவர்கள். கொடூரமான படுகொலை செய்யப்பட வேண்டியவர்கள்’’ என்ற மனநோய் அண்மைக்காலமாக இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது.