திருவில்லிபுத்தூர்: கவுசிக ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் உட்பட 6 தெய்வங்களுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் நிகழ்ச்சி திருவில்லிபுத்தூரில் விடிய, விடிய நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் கவுசிக ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் ஆகியோருக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
கோயிலில் இருந்து ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் கருடாழ்வார், பெரியபெருமாள் சன்னதியில் இருந்து பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மேள, தாளம் முழங்க பகல் பத்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு ஆண்டாள் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம் இரவு முழுவதும் நடைபெற்றது. வேதபிரான் பட்டர் கவுசிக புராணம் வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ன்டு தரிசனம் செய்தனர். அர்ச்சகர் ஒருவர் கூறுகையில், ‘‘குளிர்காலம் தொடங்கியதை அறிவிக்கும் பொருட்டு சுவாமிகளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,’’ என்றார். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் செய்திருந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி