புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டது, அரசு வாகனங்கள் கொளுத்தப்பட்டது தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கீரமங்கலத்தில், புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை கணக்கெடுக்கச் சென்ற வேளாண் அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், தங்கள் வீடுகளையும் கணக்கெடுக்குமாறு கூறி அவர்களை சிறைபிடித்தனர். தகவலறிந்து, ஆலங்குடி வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், ஆலங்குடி டிஎஸ்பி அய்யனார் ஆகியோர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், கொத்தமங்கலத்தில் வட்டாட்சியர் ரெத்தினாவதியை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்...இதனால் அவரை மீட்க முயன்ற காவல்துறையினரோடு ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. அப்போது அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டதில், ஆலங்குடி டிஎஸ்பி தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் சென்ற 5 அரசு ஜீப்புகளையும் சிலர் தீவைத்து எரித்தனர்.