புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பதே அரசியல் சார்ந்த விஷயம் அல்ல; நிதி விஷயங்களில் நன்னெறிப்படுத்தும் நடவடிக்கை. இப்படி 2 ஆண்டுக்கு பின் ஒரு விளக்கம் தந்திருப்பவர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. பணமதிப்பிழப்பு விவகாரத்தை வைத்து தான் 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் மோடி - ராகுல் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பாஜ தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் நிருபர்களிடம் பேசிய ஜெட்லி கூறியதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பதே நாட்டை, நாட்டு மக்களை நன்னெறிப்படுத்துவது தான். இந்த விஷயத்தை தேவையில்லாமல் அரசியல் ஆக்கி விட்டனர். கருப்பு பணத்திலும், தவறான போக்கையும் கொண்டுள்ள நிலையை மாற்றி அமைக்கவே இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்தார்.