விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரம் மனைவி, மாமியாரை கழுத்தறுத்து கொன்று கணவர் தற்கொலை: பொள்ளாச்சியில் பயங்கரம்

பொள்ளாச்சி: கோவை போத்தனூரை சேர்ந்தவர் பாபு (46). சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சுமதி (42). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டாகிறது. குழந்தை இல்லை. குடும்ப தகராறு காரணமாக சுமதி, கணவரை பிரிந்து பொள்ளாச்சி சி.டி.சி. காலனியில் தனது தாயார் விசாலாட்சி (60) என்பவருடன் வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமதி, விவாகரத்து கேட்டு பாபுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் சுமதி வீட்டுக்கு பாபு வந்தார். முன்பக்க கேட்டை தாண்டி குதித்து உள்ளே சென்றார்.

பின்னர், கதவை தட்டியதும் தானாக திறந்து கொண்டது. வீட்டு முன் வாசல் அறையில் விசாலாட்சியும், மற்றொரு அறையில் சுமதியும் தூங்கி கொண்டிருந்தனர். திடீரென மாமியார் வாயில் துணியை வைத்து அடைத்து, கத்தியால் அவரது கழுத்தை அறுத்தார். தாயின் சத்தம்  கேட்டு சுமதி எழுந்து வந்து கூச்சலிட்டுள்ளார். உடனே, சுமதியை பாபு கீழே தள்ளி அவரது கழுத்தையும் கத்தியால் அறுத்தார். சம்பவ இடத்திலேயே 2 பேரும் இறந்தனர். இதன்பின், பாபு அங்கேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று அதிகாலை பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமதியின் அண்ணன் பிரகாஷ் வந்து பார்த்தபோது, சுமதி, விசாலாட்சி இறந்து கிடப்பதையும், பாபு தூக்கில் தொங்கியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  தகவலறிந்து போலீசார் அங்கு வந்து 3 பேர் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விவாகரத்து கேட்டு நோட்டீஸ் கொடுத்ததால் விரக்தி அடைந்த பாபு, மனைவி, மாமியாரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: