திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ராணுவ ஆள்சேர்ப்பு மையம் உள்ளது. இங்குள்ள கேன்டீனில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்படும். மேலும் ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்களும் வழங்கப்படும். திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த கேன்டீனில் பொருட்கள் வாங்குகிறார்கள். இந்தநிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் கேன்டீனை திறக்க மேலாளர் கணேசன் வந்தார். அப்போது முன்னாள் ராணுவ வீரர்கள் சுமார் 100 பேர், அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரிடம், ``இந்த மாதத்திற்கு வரவேண்டிய மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை. கலப்பிடமில்லாத சரக்கு என்பதால்தான் மது பாட்டில்களை வாங்க விருப்பம் காட்டுகிறோம். நாளையுடன் (இன்றுடன்) அக்டோபர் மாதம் முடிய உள்ளது. இன்னும் ஏன் இந்த மாதத்துக்கான மதுபாட்டில்வழங்கப்படவில்லை’’ என்று கேட்டனர். ஆனால், அவர் செய்வதறியாது திகைத்தார்.