கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொல்ல முயற்சி நடந்ததாக கூறப்படுவது தொடர்பான ஆதாரங்களை திரட்ட சீனா உதவியை அரசு நாடியுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா. இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக சமீபத்தில் இவர் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டது. மேலும், தொலைபேசி மூலம் பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட சிறிசேனா, ‘ரா’ குறித்து தான் கூறியதாக வெளியான செய்தி ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று தெரிவித்திருந்தார். சிறிசேனாவை கொல்ல முயற்சி நடப்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு தகவல் கொடுத்ததாக போலீஸ் உளவாளி நமல் குமாரா என்பவர் கடந்த மாதம் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு மூத்த போலீஸ் அதிகாரி நலக்கா சில்வா மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்சேவை கொல்லவும் சதி நடைபெற்றதாக தெரிவித்தார்.