நெல்லை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி என்னை கொல்ல முயற்சிக்கிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் ஆபீஸ் முன் மாற்று திறனாளி வாலிபர் இன்று தீக்குளிக்க முயன்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை சங்கர்நகர் தாதனூத்து தெற்கு தெருவைச்சேர்ந்த இசக்கி மகன் பெருமாள் (32) மாற்றுத்திறனாளியான இவர், சங்கர் நகர் பேரூராட்சி நவீன கழிப்பிடத்தில் கட்டணம் வசூலிப்பவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா(19). திருமணமாகி 2 ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. மனுநீதி நாளான இன்று காலை பெருமாள் நெல்லை கலெக்டர் ஆபீசிற்கு மனு கொடுக்க வந்தார். அவரை போலீசார் உள்ளே விட மறுத்தனர்.
இதனால் அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் தீக்குளிக்க முயல்வதற்கு முன் கலெக்டரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்த மனுவை செய்தியாளர்களிடம் காட்டினார். அதை அனைவரும் வாட்ஸ் அப்பில் பதிவு செய்தனர். அந்த மனுவில், தனது மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார். இதை தட்டிக்கேட்ட என்னை அவர்கள் இருவரும் சேர்ந்து கொல்ல முயற்சிக்கிறார்கள்.
இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர்தான் உரிய நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்வதுபோல் மனைவிக்கும் வேறு நபருக்கும் தொடர்பு இருக்கிறதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி