சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ஆலப்புழா ரயிலில் 40 கிலோ கஞ்சாவை சென்ட்ரல் ரயில்நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரலுக்கு இன்று கேரளாவிலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதிகாலை 1.10 மணிக்கு 9வது பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது. அப்பொழுது இரவுப்பணியில் இருந்த தலைமை காவலர் ரயில் வந்தபிறகு வழக்கம் போல் சோதனையை மேற்கொண்டார். அப்போது, இந்த ரயிலின் பொதுப்பிரிவு பெட்டியில் கேட்பாரற்று மூன்று பேக்குகள் கிடந்தன. இதை பார்த்து சந்தேகமடைந்த அவர் உடனடியாக அந்த மூன்று பைகளை திறந்து சோதனை நடத்தினார். அப்போது, அதில் சிறு சிறு பேக்கிங்காக 40 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சாவை சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார் உடனடியாக அங்குள்ள ரயில்வே பாதுகாப்புபடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.