தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பி.கொல்லஅள்ளி கிராமத்தின் மேற்கு திசையில், சுமார் 2கிலோ மீட்டர் தொலைவில் முத்தத்ராயன் குன்று அமைந்துள்ளது. இந்த குன்று சுமார் 500 அடி உயரமுள்ளது. இதன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாறை குகை வாழிடத்தில் பெருங்காலத்தைச் சேர்ந்த வெள்ளை நிற பாறை ஓவியங்கள் உள்ளது. இந்த பாறை ஓவியங்களை, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான வரலாற்று மாணவர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:
இந்த குன்றின் குகை, அதை ஒட்டிய பாறைச்சுவர் என இரண்டு இடங்களில் ஓவியத்தொகுதிகள் காணப்படுகின்றன. குகையில் சுமார் 50 பேர் வரை தங்க முடியும். இக்குகையின் மேற்புற பாறையில் மனித உருவம் வரையப்பட்டுள்ளது.