பூ விற்பனை சில்லரையா? மொத்த வியாபாரமா?:வழிமுறையை உருவாக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை பாரிமுனை பத்ரியன் தெருவில் மொத்த பூ விற்பனை கடைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கடைகளால்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், காலி செய்யுமாறு அரசு பலமுறை உத்தரவிட்டும் கடைகள் காலி செய்யப்படவில்லை.  இந்நிலையில், தங்களின் வியாபாரத்தில் அரசு அதிகாரிகள் தலையிட தடை விதிக்க கோரி முருகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள்,  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை சட்ட விரோதமாக  உடைத்து மீண்டும் கடையை நடத்தி வருகிறார்கள். ஐகோர்ட் பல உத்தரவுகளை பிறப்பித்தும் அவற்றை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. எனவே,  இந்த உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் அந்த கடைகளுக்கு சிஎம்டிஏ அதிகாரிகள் சீல் வைக்க வேண்டும். கடைகளை அகற்ற எடுக்கப்பட்ட  நடவடிக்கை குறித்து அக். 22ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 இந்த உத்தரவை எதிர்த்து 10க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள், மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன்,  சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடை உரிமையாளர்கள் மற்றும் சிஎம்டிஏ  சார்பில் தங்களது வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், ‘‘மனுதாரர்கள் தரப்பில் சில்லரை வியாபாரம் செய்கிறோம் என்று  கூறப்படுகிறது. ஆனால், அரசு தரப்பில், மொத்த வியாபாரம் என்று கூறுகிறீர்கள். சில்லரை வியாபாரமா அல்லது மொத்த வியாபாரமா என்று எப்படி  கணிக்க முடியும். எனவே, இந்த மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்கிறார்களா, மொத்த வியாபாரம் செய்கிறார்களா என்பதை கண்டறிய ஒரு  வழிமுறையை உருவாக்கி, நாளை நீதிமன்றத்தில் தெரிவியுங்கள் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: