ஸ்ரீநகர்: ‘‘காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படும்’’ என்று தலைமை செயலாளர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 8 முதல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு நேற்று முடிந்தது. இது தொடர்பாக காஷ்மீர் தலைமை செயலாளர் பிவிஆர் சுப்பிரமணியம் கூறியதாவது: காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்காக 400 கம்பெனி மத்திய படை போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், காஷ்மீர் போலீசார், துணை ராணுவப் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதன் மூலம், உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்த அனைத்து வேட்பாளர்களுக்கும், பிரசாரத்தின் போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.