மானாமதுரை: மதுரையை சேர்ந்த வக்கீல் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் தமிழகம் முழுவதும் சென்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்று மாலை 4 மணிக்கு மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி தங்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டே வழிநெடுகிலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து துண்டுபிரசுரங்களை கொடுத்து பிரசாரம் செய்தனர். மாலையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த கேப்பர்பட்டினம் பகுதியில் பிரசாரம் செய்துகொண்டிருந்தனர். திடீரென அங்கு வந்த பாஜகவினர் நந்தினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தந்தை ஆனந்தனை 5 பேர் அடித்து உதைத்தனர். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், பாஜகவினரிடம் இருந்து அவர்களை மீட்டனர். தகவலறிந்து போலீசார் அங்கு வருவதற்குள் பாஜகவினர் தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் பற்றி விசாரித்த போலீசார் இதுகுறித்து புகார் கொடுக்குமாறு கூறினர்.