ஆலந்தூர்: மணப்பாக்கம் 157வது வட்டத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது மரக்கன்றுகள் வளர்ந்துள்ளதால், கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட்டு தொட்டி வலுவிழக்கும் அபாயம் உள்ளது.மணப்பாக்கம் 157வது வட்டத்திற்கு உட்பட்ட மணப்பாக்கம் பிரதான சாலையில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதிலிருந்து சுற்றுப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட தொட்டியை மாநகராட்சி ஊழியர்கள் சரிவர சுத்தம் செய்வதில்லை. முறையாக பராமரிப்பதும் இல்லை. இதனால், தற்போது தொட்டியின் மேல் பகுதியில் அரச மரங்கள் வளர்ந்து கிளைகளை பரப்பியுள்ளது. இதை உடனடியாக அகற்றவில்லை எனில், கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட்டு, மேல்நிலை தொட்டி வலுவிழக்கும் அபாயம் உள்ளது, என பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.