நெல்லை: சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியதாக சமூகவலைத்தளங்களில் படங்கள் வெளியானதையடுத்து அங்கு சோதனை நடத்தி 18 டிவிக்கள் உள்ளிட்டவை பறிமுதல் ெசய்யப்பட்டன.இதைத்தொடர்ந்து கோவை, கடலூர், சேலம் மத்திய சிறையில் இவ்வார தொடக்கத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புழல் சிறை அதிகாரிகள் 8 பேர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக புழல் சிறையில் இருந்து தலைமை காவலர் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிறைகைதிகளும் தஒரு சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய சிறைகளில் ஒன்றான பாளை மத்திய சிறையில் நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் 60 போலீசார் மொத்தமுள்ள 8 பிளாக்குகளிலும் சோதனையிட்டனர்.கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்களான பீடி, சிகரெட், கஞ்சா, மதுபானங்கள் மற்றும் சொகுசு வாழ்க்கைக்குரிய பொருட்கள் உள்ளதா என்பது குறித்து அறைகள் தோறும் அலசினர். கழிப்பறைகள், மருத்துவமனை, நூலகம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் சிக்கவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு பிளாக்கில் தீப்பெட்டிக்கு பதிலாக பீடி, சிகரெட்டுகளை உரசி பற்ற வைக்கும் கம்பி மட்டுமே சிக்கியது. அலுமினிய தட்டை வளைத்து கத்தி போன்று ஆயுதமும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஏ கிளாஸ் கைதிகளுக்கு விதிமுறைகளை மீறி கூடுதல் வசதிகள் ஏதேனும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு ெசய்தனர். 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையால் கைதிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது.