சென்னை: உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமதிப்பு என எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி ஆளுநர் மாளிகை விளக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவியேற்பு விழாவை சுட்டிக்காட்டியுள்ளார். இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசியலமைப்பு படிநிலை வரிசைப்படி மரியாதை வழங்கப்படாமல் அவமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முதல் வரிசைகளில் அமரவைக்கப்பட வேண்டும் என்பது தான் மரபு என்றும், புரோட்டாக்கால் எனப்படும் அரசியலமைப்புப் படிநிலை வரிசையும் இதையே வலியுறுத்துகிறது எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.