நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் எம்பி கேவியட் மனு

சென்னை: நீட் தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரங்கராஜன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு மே 6ம் தேதி நடந்தது. இதில் தமிழில் மட்டும் 24 ஆயிரத்து 72 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தமிழில் சரிவர மொழிபெயர்க்கப்படவில்லை. மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்னையால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த  மனுவை விசாரித்த நீதிமன்றம்,”பிழையாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண் என்ற வீதத்தில் மொத்தம் 196 மதிப்பெண் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்குமாறு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் 2 வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டது.இந்நிலையில், தமிழகத்தில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எல்லா மாநிலங்களிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இதனால் தரவரிசைப்பட்டியல் மாறினால் எல்லா மாநிலங்களின் அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கை மீண்டும் நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும் 2 வாரத்தில் புதிய தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டால், தமிழில் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைப்பதற்கான அதிகப்படியான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளும் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வு குறித்து எம்பி டி.கே.ரங்கராஜன் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ நிர்வாகமோ அல்லது தனிநபர் யாராவதோ உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்தால் எங்களது தரப்பின் பதில் மற்றும் கருத்தை கேட்காமல் நீதிமன்றம் எந்தவித புது உத்தரவையும் பிறப்பிக்க கூடாது’’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: