குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

கொருக்குப்பேட்டை: குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், 41வது வார்டு கண்ணகிநகர், கருமாரி அம்மன் நகர் ஆகிய பகுதிகளில்  3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், குடிநீர் வாரிய அதிகாரிகளை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் லோகநாதன் தலைமையில், 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொருக்குப்பேட்டை கருமாரி அம்மன் நகர் அருகில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். பின்னர், சம்ப்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: