கோவில்பட்டி: கோவில்பட்டியில் திருமண உதவித்தொகை வழங்காததை கண்டித்து புதுமணப்பெண், தனது கணவருடன் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியை சேர்ந்தவர் மாரிச்செல்வி. இவரது தந்தை இறந்து விட்டார். இவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண படுக்கையில் இருந்து வருகிறார். இந்நிலையில் மாரிச்செல்விக்கும் எட்டயபுரம் மேலரதவீதியைச் சேர்ந்த முத்தரசு மகன் ரூபன் சக்கரவர்த்திக்கும் கடந்த 22ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்னதாக தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின்கீழ் உதவித்தொகை கேட்டு கடந்த 18ம் தேதி இ-சேவை மையம் மூலம் மாரிச்செல்வி விண்ணப்பம் செய்தார். விண்ணப்பம் தொடர்பாக எந்தவித ஆய்வும் செய்யாமல், திருமண உதவித்தொகை பெறுவதற்கு 72 ஆயிரம் ஆண்டு வருமானம் என்பதற்கு பதிலாக 76 ஆயிரம் ஆண்டு வருமானம் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், இவருக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை.