புதுடெல்லி: தமிழகத்தில் நிலவும் சில அவலங்கள் குறித்து சோனியாகாந்தியுடன் பேசியதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் சோனியாகாந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று தெரிவித்தார். சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி வழக்கறிஞரையும் கைது செய்தால் இது எங்கு சென்று முடியும் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். நேரம் வரும் போது தேர்தல் கூட்டணி குறித்து பேசப்படும் என்றும், காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதிகள் நியமிப்பது பற்றி கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியுடன் பேசுவேன் என்று சோனியாவை சந்தித்தப்பின் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை தலைமை தேர்தல் ஆணையத்தில் கமல் பதிவு செய்திருந்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஜூன் 20ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 3ம் தேதி அவருக்கு கடிதம் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.