புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அரசு பள்ளி மாணவிகள் மரத்தடியில் கல்வி பயின்றபொழுது மரத்தின் மேல் விளையாடிக் கொண்டிருந்த பச்சை பாம்புகளில் இருந்து கசிந்த திரவம் பட்டதால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகள் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் ராப்பூசல் பஞ்சாயத்து குப்பத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு மாணவிகள் ஒரு மரத்தின் அடியில் படித்துக் கொண்டிருந்தனர். அந்த மரத்தில் மூன்று பச்சை பாம்புகள் ஒன்றோடு ஒன்றாக பின்னி விளையாடி கொண்டிருந்தன. அப்பொழுது மரத்தடியில் கல்வி பயின்ற ஐந்தாம் வகுப்பு மாணவிகள் குப்பத்துபட்டியை சேர்ந்த விஜயக்குமார் மகள் மணிமேகலை (10), ராமன் மகள் கங்காதேவி (10) சிங்கமுத்து மகள் பாண்டிமீனாள் (10) ராசு மகள் மகேஸ்வாரி (10) முருகன் மகள் சிவஜோதி (10) ஆகிய 5 மாணவிகள் மீது அந்த பாம்பில் இருந்து கசிந்த திரவம் பட்டுள்ளது.