வேதாரண்யம்: நாகை மீனவர்கள் தலையில் ஐஸ்கட்டிகளை வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தி இலங்கை கடற்படையினர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் சசிக்குமார்(40). இவருக்கு சொந்தமான பைபர் படகில் சக்திநாதன், சக்திபாலன், கதிரவன், அருண்குமார் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை அவர்கள் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இதுபோல ஆறுமுகம்(50) என்பவருக்கு சொந்தமான படகில் ஆறுமுகம், சிங்காரம், வேதையன், தங்கவேல் ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் இன்னொரு பைபர் படகில் கடலுக்கு சென்றனர். இரவு விடிய விடிய மீன் பிடித்து விட்டு 8 பேரும் நேற்று அதிகாலை கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். கோடியகரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் வந்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை படகு வேகமாக வந்து 2 பைபர் படகுகளையும் மடக்கி நிறுத்தியது. இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகுகளில் ஏறி அங்கு இருந்த ஐஸ்கட்டிகளை எடுத்து மீனவர்களின் தலையில் வைத்து அவர்களை உயர் அழுத்த மின்வயர்களால் சரமாரியாக அடித்தனர். இதில் 8 மீனவர்களுக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.