புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஏழை மக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கி மருத்துவர் ஒருவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இயந்திரம்போல் சுழலும் இன்றைய உலகத்தில் மனிதாபிமானம் என்றால் என்ன? என்று கேட்கிற நிலையில் தான் உள்ளோம். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மருத்துவர் அபிஜீத் இதில் விதிவிலக்காக உள்ளார். ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறைக் கொண்ட இவர், இலவச மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறார். அதுவும் அந்த மக்களின் வசிப்பிடத்திற்கே சென்று தனது சேவையை வழங்கி வருவது மருத்துவர் அபிஜீத்தின் சிறப்பு. வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளும் இவர் மருந்துகளையும் இலவசமாக வழங்கி வருகிறார்.