ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதி அமைப்பு: முதல்கட்டமாக ரூ.100 கோடி வழங்கி அரசு உத்தரவு

சென்னை: தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதியை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இத்தகைய நிதி அமைப்பு  முயற்சி இந்தியாவிலேயே முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காலநிலை மாற்ற நிதியானது பல்வேறு, காலநிலை மாற்ற முயற்சிகள், தணிப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும். அரசு மேம்பாட்டு நிதி நிறுவனங்கள், சர்வதேச காலநிலை நிதி போன்றவற்றில் இருந்து தேவையான நிதி ஆதாரங்கள் இந்த நிதிக்கு திரட்டப்படும்.இந்த நிதியானது தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் மூலம் ரூ.1000 கோடி நிதி அளவுடன், தேவைப்படின் மற்றொரு 1000 கோடி ரூபாய்க்கு விரிவாக்கும் வாய்ப்புடன் நிர்வகிக்கப்படும்.இந்த நிதிக்கு அரசு பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் ரூ.100 கோடி முதல் கட்டமாக துவக்க மூலதனமாக அளிக்கும். 10 ஆண்டு கால அவகாசத்துடன், 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும் வாய்ப்புள்ள பங்கு மூலதனங்கள், பங்குகளுடன் இணைக்கப்பட்ட இதர நிதி ஆதாரங்கள், கடனீட்டு பத்திரங்கள், மாற்றத்தக்க நிதி ஆதாரங்கள் மூலம் இதற்கு நிதி திரட்டப்படும். காலநிலைக்கு ஏற்ற பொருட்கள், மாற்றுப் பொருட்கள், மாசுக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றல், கார்பன் பசுமை இல்ல வாயு அளவு குறைப்பு பொருளாதாரம், சுற்றுச்சூழல் சுற்றுலா, மின்வாகனம், கலப்பின வாகனம் தொடர்புடைய உள்கட்டமைப்பு, வன மேம்பாடு பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, நிலையான விவசாயம் ஆகியவற்றிற்கு இந்நிதி முதலீட்டில் கவனம் செலுத்தப்படும்.  காலநிலை மாற்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்களை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்க இயக்குநர்களாகவும், மாவட்ட வன அலுவலர்களை மாவட்ட காலநிலை அலுவலர்களாகவும், நியமித்து மாவட்ட காலநிலை மாற்ற இயக்கங்களை அரசு அமைத்துள்ளது. தமிழகத்தை பசுமையான, தூய்மையான மற்றும் அதி மீள் தன்மையுள்ள மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல உத்திகளை வகுத்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* கரிம மாசு இல்லா கோயம்பேடு மார்க்கெட்ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மொத்த சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக மாற்றவும் அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும் 25 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அவற்றை முற்றிலும் பசுமை பள்ளிகளாக மாற்றவும், 10 காலநிலை மேம்படுத்தப்பட்ட கிராமங்களை உருவாக்கவும், காலநிலை மாற்ற மீள்தன்மையுடன் கூடிய பசுமை நினைவு சின்னங்கள் மற்றும் முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் போன்ற முக்கிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.* கடலோர காவல் அரண்காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய முயற்சிகளாக, அலையாத்தி காடுகளுக்கான தாவர இனங்கள், பனை மரங்கள் மற்றும் பிற பொருத்தமான மர வகைகளை நடுவதன் மூலம் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இயற்கையான அரண்கள் உருவாக்கப்படும்….

The post ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதி அமைப்பு: முதல்கட்டமாக ரூ.100 கோடி வழங்கி அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: