கோவை: பேராசிரியர் லஞ்சம் வாங்கியது போன்ற வெளியான வீடியோ குறித்து, உயர் கல்வித்துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்படும் என்று கோவை பாரதியார் பல்கலையின் பதிவாளர் தெரிவித்துள்ளார். கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் பணி நியமனத்திற்கு ₹30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜூம் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 4 மாதங்களாக பல்கலையில் விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றும் பேராசிரியர் ஞானசேகரன், ஒருவரிடம் பணம் வாங்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பணத்தை பெற்றுக்கொண்ட ஞானசேகரன், துணைவேந்தரிடம் சேர்த்துவிடுவேன் என்று கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளன.