சென்னை: தமிழ் உள்பட தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஜே.டி. சக்கரவர்த்தி. இந்தியில் ராம்கோபால் வர்மாவின் ‘சத்யா’ படத்தில் நடித்து புகழ் பெற்றவர். பல படங்களில் ஹீரோவாகவும் சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் அண்மையில் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. சக நடிகை ஒருவரின் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு விருந்துக்கு சென்றபோது நடந்த சம்பவத்தைத்தான் அந்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் ஜே.டி. சக்கரவர்த்தி. நடிகையின் பெயரை வெளியிடாமல் அந்த நடிகைக்கு தயாரிப்பாளர் ஒருவரால் ஏற்பட்ட சம்பவத்தை பற்றி கூறியிருக்கிறார்.
அதில், ‘‘நானும் என் நண்பரும் நடிகருமான சுரேஷும் பிரபல நடிகை ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். இரவு சுமார் 8:30 மணியளவில் அவரது வீட்டு கதவை யாரோ தட்டினார்கள். அது உணவு கொண்டுவருபவர் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அந்த நடிகை, ஜன்னல் வழியாகப் பார்த்தார். வந்திருந்தவர் ஒரு பெரிய சினிமா தயாரிப்பாளர். அவரைக் கண்டதும், நடிகை எங்களை இருவரையும் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துக் கொள்ளச் சொன்னார். காரணம் தெரியாமல், நாங்கள் இருவரும் அவர் சொன்னபடியே செய்தோம். நடிகைக்கு தாத்தாவின் வயதை உடைய அவர் உள்ளே வந்தார்.
ஆரம்பத்தில், கட்டிலுக்கு அடியில் இருந்த நாங்கள் இருவரும் இருந்த அந்த நிலையை கண்டு எங்களுக்குள் சிரித்தோம். ஆனால் அந்த தயாரிப்பாளர் சென்ற பிறகு, நடிகை சிரித்துக் கொண்டிருந்தபோதிலும் நாங்கள் கண்ணீர் விட்டோம். ஏனெனில் அந்த நபர் நடிகையிடம் பேசிய விதம் மிக அநாகரிகமாக இருந்தது. மேலும் அவர் நடிகையை நடத்திய விதமும் ஒட்டுமொத்தமாகப் பரிதாபகரமானது. அவர் நடிகையிடம் காது கூசும் ஆபாச வார்த்தைகளை பேசிவிட்டு சென்றார். நடிகை அழுவார் என நினைத்தால் சிரித்துக் கொண்டே, ‘இது பழகிவிட்டது… என்ன செய்வது, வாய்ப்புகள் தேவைப்படுகிறதே. அதனால் அவரை பகைத்து கொண்டு எதுவும் செய்ய முடியாது’ என விரக்தியாக சொன்னார். இதுதான் சினிமாவில் நடிகைகளின் நிலை’’ என ஜே.டி. சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
