சென்னை: தமிழ்ப் படவுலகில் நடிகராக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள முனீஷ்காந்த் அளித்த பேட்டி வருமாறு: ‘தாய் கிழவி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் பென்னி குயிக் கேரக்டரில் நான்தான் நடிக்க வேண்டும் என்ற இயக்குனர் சிவக்குமார் முருகேசன் முடிவுக்கு சிவகார்த்திகேயன் சம்மதித்தார். இதில் திருமணத்தை பற்றி நான் பேசும் காட்சியில் சீரியஸ், நகைச்சுவை கலந்து ஏற்ற, இறக்கத்துடன் பேச வேண்டும். டப்பிங்கில் இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதா என்பதை அப்போது தெரிந்துகொண்டேன். ராதிகா மேடத்துடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது. ‘இரண்டு வானம்’, ‘மரகத நாணயம் 2’ உள்பட பல படங்களில் நடிக்கிறேன். சிவக்குமார் முருகேசன் இயக்கும் ‘சேயோன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளேன். அவர் அழைத்தால் நடிப்பேன்.
தமிழில் 2002ம் முதல் சின்னச்சின்ன வேடங்களில் நடித்த நான் தொடர்ந்து பல நிறுவனங்களில் எனது போட்டோவை கொடுத்து வாய்ப்பு கேட்டுள்ளேன். கடந்த 2014ல் ‘முண்டாசுப்பட்டி’ மூலம் பிரபலமானேன். அப்படம் வெளியாகி 12 ஆண்டுகளாகி விட்டது. இத்தனை வருடங்களில் சினிமா எனக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது. வெற்றி, தோல்வியை நிறைய பார்த்துவிட்டேன். அது ஒரு புரியாத புதிர். கஷ்டப்பட்டால் ஜெயிக்க முடியும். கடந்த ஆண்டு ரிலீசான ‘மிடில் கிளாஸ்’ படத்தில் நான் ஹீரோ இல்லை, கதையின் நாயகன் மட்டுமே. தொடர்ந்து அப்படிப்பட்ட கதைகள் அமைந்தால் முதன்மை வேடத்தில் நடிப்பேன்.
