கோடீஸ்வரர் சத்யராஜின் மகள் சீதா என்கிற ஐஸ்வர்யா அர்ஜூன், சமையல் கலை ஒர்க்ஷாப்பிற்காக காரில் வெளியூருக்கு தனியாக பயணிக்கும்போது நிரஞ்சனை சந்திக்கிறார். அப்போது வழியிலுள்ள டீக்கடை, பள்ளிக் குழந்தைகள், ரோட்டில் பழம் விற்கும் பெண் ஆகியோரை சந்திக்கின்றனர். பிறகு நிரஞ்சனை இறக்கிவிட்டு, ஒர்க்ஷாப் நடக்கும் இடத்துக்கு ஐஸ்வர்யா அர்ஜூன் செல்லும்போது, காஸ் கசிவு காரணமாக கட்டிடம் வெடித்து சிதறி, தீயில் சிக்கி பலர் பலியாகின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
வித்தியாசமான கதையை, பல படங்களில் பார்த்த காட்சி களின் மூலம் சொல்லியிருக்கிறார், எழுதி இயக்கி நடித்துள்ள அர்ஜூன். மிகவும் கனமான சீதா கேரக்டரில் ஐஸ்வர்யா அர்ஜூன் சிறப்பாக நடித்துள்ளார். நிரஞ்சன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ், சுமித்ரா, கோவை சரளா, சரண் ஆகியோர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சிறப்பு வேடம் ஒன்றில் துருவா சர்ஜா வருகிறார்.
ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது. அனூப் ரூபன்ஸ் இசையில் பாடல்களில் தெலுங்கு வாடை. பின்னணி இசை கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. அடிதடியை குறைத்து, குடும்ப உறவுகள் மற்றும் காதலர்களின் அன்பை பதிவு செய்த இயக்குனர் அர்ஜூன், பல காட்சிகள் இது டப்பிங் படம் என்று சொல்வதை தவிர்க்க முயற்சித்து இருக்கவேண்டும்.
