சென்னை: கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா பிரிவில், இ.வி.கணேஷ் பாபு எழுதி இயக்கி நடித்த ‘ஆநிரை’ என்ற குறும்படம் திரையிடப்பட்டது. கதையின் நாயகனாக, சிங்கப்பூரில் ஆசிரியராக பணியாற்றி வரும் அர்ஜூனன் மாரியப்பன் நடித் துள்ளார். மற்றும் மீரா, அஞ்சனா தமிழ்ச்செல்வி, காமாட்சி சுந்தரம், கௌரி சங்கர், இரா.செழியன் நடித்து இருக்கின்றனர். பி.செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்க, பன்னீர்செல்வம் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.
இந்த குறும்படம் குறித்து இ.வி.கணேஷ் பாபு கூறியதாவது:‘ஆநிரை’ குறும்படத்தை பார்த்த அனுபம் கெர், ‘பணம்தான் பெரிது என்று நினைக்கும் இந்த உலகில், அன்பே பெரிது என்று படம் காட்டுகிறது’ என்று பாராட்டினார். ‘பசுத்தோலில் செய்யப்பட்ட இசைக்கருவி மீது முகத்தை வைத்து, அதை பசு மாடாகவே நினைத்து அர்ஜூனன் மாரியப்பன் கதறும் காட்சி உருக வைத்தது. இனி நான் தோல் இசைக் கருவியை வாசிக்க முடியுமா என்று தெரியவில்லை’ என்று, ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி நெகிழ்ந்தார்.
