சாலையில் நடந்து சென்ற போது செல்போனை பறிகொடுத்த பாலிவுட் நடிகை கதறல்: அபிஷேக் பச்சன், பாடகி ஷெர்லி ஆறுதல்

மும்பை: சாலையில் நடந்து சென்ற பாலிவுட் நடிகையின் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவத்தில், நடிகர் அபிஷேக் பச்சன், பாடகி ஷெர்லி ஆகியோர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.  பாலிவுட் நடிகை நிகிதா தத்தா தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘எனக்கு கிடைத்த ஒரு மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். நேற்றிரவு (நேற்று முன்தினம்) 7.45 மணியளவில் மும்பை அடுத்த பாந்த்ராவின் 14வது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது என்னை இரண்டு ஆண்கள் பைக்கில் பின்தொடர்ந்தனர். திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் என் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். அவர்களை பிடிக்க நான் முயற்சித்தும் முடியவில்லை.

அதிர்ச்சியடைந்து நின்றிருந்த என்னை பார்த்த ஒருவர், தனது பைக்கின் பின்னால் என்னை அமரவைத்து செல்போன் பறித்த பைக்கை துரத்திச் சென்றார். அதற்குள் அவர்கள் மாற்றுவழியில் தப்பிவிட்டனர். இந்த சம்பவத்தின் போது எனக்கு ஏற்பட்ட பீதியில் இருந்து என்னால் மீள முடியவில்லை. எனது நிலைமையை அறிந்து அங்கிருந்த சில நல்லவர்கள் என்னை அமைதிபடுத்தினர். ஒருவர் எனக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார். என்னிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் வழக்குபதிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த பதிவை போடுகிறேன். எனக்கு ஏற்பட்டது போல் மற்றவர்களுக்கும் நடக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவை பார்த்த பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், பாடகி ஷெர்லி செட்டியா உள்ளிட்டோர் நிகிதா தத்தாவுக்கு ஆறுதல் கூறி பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

Related Stories: