அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ் பிரகாஷ்ராஜுடன் கூட்டணி

டைட்டிலை பார்த்தவுடன் பிரகாஷ்ராஜ் கட்சி தொடங்கிவிட்டார். அதில் 3 நடிகைகளும் கூட்டணியாக இணைந்திருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டால் அது நிஜமல்ல. கேமரா கவிஞர் பாலுமகேந்திரா 1979ம் ஆண்டு இயக்கிய அழியாத கோலங்கள் இன்றும் மறக்கமுடியாத படங்களில் ஒன்று. அவரிடம் இணைந்து பணியாற்றிய வர்கள் அர்ச்சனா, இயக்குனர் எம்ஆர்.பாரதி. இவர்களின் புதிய படைப்பாக அழியாத கோலங்கள் 2ம் பாகம் உருவாகியிருக்கிறது. இதுபற்றி இயக்குனர் கூறியது:

அழியாத கோலங்கள் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகவில்லை. ஆனால் அந்த டைட்டிலை இப்படத்துக்கு பயன்படுத்தி இருக்கிறோம். பாலுமகேந்திரா படங்களில் நடித்தவர் அர்ச்சனா. என்றோ ஒருநாள் அர்ச்சனாவிடம் நீ நல்ல படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்றார் பாலுமகேந்திரா. அதன் விளைவு தான் அழியாத கோலங்கள் 2. சாகித்ய அகடமி விருது பெறும் ஒரு எழுத்தாளர் அந்த விருதை பெற்றுக்கொண்டு தன் பழைய காதலியை பார்க்க வருகிறார்.

அங்கு அவர் இறந்துவிடுகிறார். ஊரே தப்பாக பேசுகிறது. அந்நேரத்தில் எழுத்தாளரின் மனைவி கணவரின் பழைய காதலியை சந்திக்க வருகிறார். அப்போது என்ன நடக்கிறது என்பதை யதார்த்தமாக படம் சொல்கிறது. எழுத்தாளராக பிரகாஷ்ராஜ், காதலியாக அர்ச்சனா, மனைவியாக ரேவதி நடித்திருக்கின்றனர். ஈஸ்வரிராவ், நாசர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.எல்.அழகப்பன் தயாரிப்பு. ராஜேஷ் ஒளிப்பதிவு. அருண்சித்தார்தா இசை. இப்படம் பாலுமகேந்திராவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. இவ்வாறு இயக்குனர் எம்.ஆர்.பாரதி கூறினார்.

Related Stories: