கார்த்திகை தீபமும் விளக்கேற்றும் சரியான முறையும்

கார்த்திகை தீப திருநாளானது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருநாள் 10.12.2019 செவ்வாய்க் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்படும். பஞ்சபூதங்களில் நெருப்பிற்குரிய தளமாக விளங்குவது திருவண்ணாமலை ஈஸ்வரர் கோயில். இந்த நாளன்று மாலை 6 மணி அளவில் நம் வீடுகளில் நட்சத்திரங்கள் போல ஜொலிக்கும் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவோம். நம் வீட்டினை கோவில் போல மாற்றும் இந்த தீப திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடப்படும். நாம் விளக்கு ஏற்றுவதற்காக ஊற்றப்படும் எண்ணையும், அதில் இடப்படும் திரியும் தன்னைக் கரைத்துக் கொண்டு நமக்கு பிரகாசமான ஒளியை தருகிறது. இது போல மனிதர்களும் தன்னலம் பாராமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த கார்த்திகை தீபம் உணர்த்துகிறது.

அதுமட்டுமல்லாமல் தீபத்தை சிறப்பாக கொண்டாடப்படும் திருவண்ணாமலையில் தான் சக்தியும் சிவனும் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் கலந்தனர். இதனால் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து குடும்பத்தை சண்டை சச்சரவுகள் இல்லாமல் வழிநடத்தவும் இந்த கார்த்திகை தீபத்தை கொண்டாடலாம்.தீபத்தன்று நாம் ஏற்றும் விளக்கின் ஒளியானது யார் மீதெல்லாம் படுகிறதோ, அவர்களுக்கெல்லாம் மறுபிறவியில் துன்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல நம் பூமியில் வாழும் புழு, பூச்சி, கொசு, தாவரங்கள், விலங்குகள் இப்படி எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். இறைவனுக்கு விளக்கு ஏற்றுவதால் எத்தனை பயன் என்பதை, ஒரு வரலாற்று கதையை கொண்டு நாம் அறியலாம்.

சகல செல்வங்களையும் பெற்று வாழ்ந்த மகாபலி சக்கரவர்த்தி அவரது முற்பிறவியில் எலியாக பிறந்திருந்தார். அந்த எலியானது ஒரு கோவிலில் தினமும் விளக்கில் உள்ள எண்ணெயை குடித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தது. ஒரு நாள் எதிர்பாராமல், எண்ணையை குடிக்கும்போது எலியின் வால் விளக்கின் திரியை தூண்டிவிட்டு, அந்த தீபம் அணையாமல் எதிர்ப்பதற்கு காரணமாக இருந்தது. இதனால் அந்த கோவிலின் கர்ப்பகிரகம் இருளிலிருந்து நீங்கி பிரகாசமானது. இந்த எலி தன்னை அறியாமலேயே புண்ணிய காரியம் செய்திருக்கிறது. எலி அறியாமல் செய்த இந்த காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதாரம் எடுத்திருக்கிறது. இறைவன் மகாபலிக்கு முக்தி அளித்தபோது ‘கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்ற மகாபலியின் விருப்பத்தினை, நிறைவேற்றி இறைவன், மகாபலியை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். இப்படியாக மகாபலியின் வாழ்க்கையானது இறைவனின் திருவருளை சென்றடைந்தது.

தீபம் ஏற்றும் முறை

கார்த்திகை தீபத்தன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றுவது நல்லது. வீட்டு வாசலில் குத்து விளக்கில் தீபம் ஏற்றுவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த நாளில் நைவேத்தியமாக அவல், கடலை நெல்பொரி, அப்பம் இவற்றை இறைவனுக்கு படைப்பார்கள்.

நாம் ஏற்றும் அகல் தீபமானது கிழக்கு திசை நோக்கி ஏற்றி வைத்தால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு திசை நோக்கி ஏற்றும்போது திருமணத்தடை நீங்கும். எந்த காரணத்தை கொண்டும் தெற்குத் திசையை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டாம். குத்து விளக்கை வாசலில் ஏற்றி வைப்பவர்களுக்கு, நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமென்றால் ஒரு முகம் ஏற்ற வேண்டும். நம் குடும்பம் சிறப்பாக வாழவும், நம் குடும்ப வாரிசுகள் தழைத்தோங்க வேண்டுமென்றால் இருமுகம் ஏற்றவேண்டும்.

நம் குடும்பத்தில் உள்ள புத்திர தோஷம் நீங்க மூன்று முகம் ஏற்றவேண்டும். வீட்டில் செல்வவளம் பெருக நான்கு முகம் ஏற்ற வேண்டும். சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ ஐந்துமுக ஏற்றி வழிபட வேண்டும். இப்படியாக நாம் கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி நாம் மட்டும் நன்றாக வாழவேண்டும் என்று வேண்டிக் கொள்ளாமல், இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எந்தவித கஷ்டமும் இன்றி வாழ அந்த இறைவனை வேண்டி இந்த கார்த்திகை தீபத்தை கொண்டாடுவோம்.

Related Stories: