கள்ளக்காதலர்களை ஏவி கணவரை வெட்டிக்கொன்ற மனைவி: அந்தமான் தப்ப முயன்ற போது போலீசிடம் சிக்கினார்

ராமநாதபுரம்: தேவிபட்டினம் அருகே கள்ளக்காதலர்களை ஏவி, கணவரை வெட்டி கொலை செய்து விட்டு, அந்தமான் தப்ப முயன்ற மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே சிங்கனேந்தலை சேர்ந்தவர் பிச்சைக்கனி (43). இவரது மனைவி சாந்தி (33). ஒரு மகன், 2 மகள் உள்ளனர். புரோட்டா மாஸ்டராக வெளிநாட்டில் வேலை பார்த்த பிச்சைக்கனி, கடந்த மே 25ம் தேதி ஊர் திரும்பினார். 27ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. சாந்தி கொடுத்த புகாரின்பேரில், தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.சந்தேகத்தின் அடிப்படையில் சாந்தியிடம், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அதில், அவரது உறவினர்களான பார்த்திபன், கலைமோகன் ஆகியோருடன் சாந்தி அடிக்கடி நீண்டநேரம் பேசியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கலைமோகனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், பார்த்திபன், அவரது தம்பி கலைமோகனுடன், சாந்திக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரிந்தது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவர், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பார் என்ற எண்ணத்தில், கலைமோகனிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து பிச்சைக்கனியை கொலை செய்யுமாறு  சாந்தி கூறியுள்ளார்.அதன்படி மே 27ம் தேதி பார்த்திபன், கலைமோகன் ஆகியோர் பிச்சைக்கனியை மது குடிக்க அழைத்துச் சென்று அரிவாளால் துண்டு, துண்டாக வெட்டினர். பின்னர் அரசலூர் அருகே காட்டில் உடலை வீசி எறிந்துள்ளனர். பிச்சைக்கனி உடல் பாகங்களை எலும்புக்கூடுகளாக தேவிபட்டினம் போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர். இதில் தொடர்புடைய பார்த்திபன் மே 30ம் தேதி சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். கலைமோகனை (26) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தமான் தப்பிச் செல்ல மதுரை விமான நிலையம் அருகே பதுங்கியிருந்த சாந்தியை தனிப்படை போலீசார் கைது செய்து, ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மகளிர் சிறையில் அடைத்தனர்….

The post கள்ளக்காதலர்களை ஏவி கணவரை வெட்டிக்கொன்ற மனைவி: அந்தமான் தப்ப முயன்ற போது போலீசிடம் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: