யார் பெரியவர்?

கிறிஸ்துவம் காட்டும் பாதை !!

மூன்று மனிதர்கள் ஒன்று சேர்ந்து கடவுளைக்காண விண்ணுலகம் சென்றார்கள். கடவுளின் அருகே ஒரே ஒரு நாற்காலிதான் இருந்தது. மூவரில் யார் அந்த நாற்காலியில் அமர்வது? முதலாவதாக முந்திக்கொண்டவர் சொன்னார். கடவுளே! மண்ணுலகில் தங்களைப்பற்றி மக்களுக்குப் போதிப்பதையே எனது தொழிலாகக் கொண்டிருப்பவன் நான். ஏராளமான மக்களுக்கு தெய்வ பக்தியை ஊட்டி வளர்த்து அவர்களை நல்வழிப்படுத்தியவன் நான். எனவே நான்தான் அந்த நாற்காலியில் முதலில் அமரத்தகுந்தவன் என்றார். இரண்டாம் மனிதர் சொன்னார், கடவுளே! உமக்குக் கோயில் கட்டுவதற்கு நான் ஏராளமான நன்கொடைகளை கொடுத்திருக்கிறேன். என் பராமரிப்பில் உமது ஆலயங்கள் பல இருக்கின்றன. மக்கள் உங்களை நெருக்கடியின்றி வசதியாக வழிபட வழி வகுத்தவன் நான். எனக்குத்தான்

அந்த நாற்காலியில் அமரத் தகுதி உள்ளது என்றார். மூன்றாவது நபர், எந்த அக்கறையுமின்றி, பதட்டமில்லாமலும், அமைதியாக நின்றுகொண்டிருந்தார். கடவுள் அவரிடம், இந்த நாற்காலி உனக்கு வேண்டாமா? என்று கேட்டார். அப்படியில்லை! அது எனக்குரியதில்லை என்று நினைக்கிறேன். நான் மண்ணுலகில் உம்மைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை. ஏழை மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து என்னை முன்னிறுத்தாமல் முதன்மையான இடம் தேடாமல், காலம் கழித்தவன் நான். அதனால் இந்த நாற்காலிக்காக இவர்களுடன் போட்டி போட விருப்பமில்லை என்றார்.

கடவுள் நிதானமாகச் சொன்னார், என் அருகில் இருக்கும் நாற்காலி உமக்காகத்தான் காத்திருக்கிறது. ஏழைகளின் வடிவில்தான் உலகில் நான் குடியிருக்கிறேன். நீர்தான் எனக்கு அதிகமாகத் தொண்டு செய்தவர். மகிழ்கின்றேன்! வாரும்! வந்து என் அருகில் அமரும் என்றார். வழிபாட்டை விட, காணிக்கையைவிட ஏழை, எளியவர், ஆதரவற்றோர், அனாதைகளுக்குச்செய்யும் தொண்டே இறைவனுக்கு ஏற்புடையது.‘‘யார் பெரியவர் என்ற வாக்குவாதம் தம் சீடர்கள் இடையே நடப்பதை அறிந்த இயேசு அவர்களைத் தம் அருகில் அழைத்து, ‘‘ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும், அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்’’ என்றார். பிறகு அவர் ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி அதை அரவணைத்துக்கொண்டு, ‘‘இத்தகைய சிறுபிள்ளைகளில் ஒன்றை என் பெயரால்் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டுமல்ல, என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என்று இயேசு தம் சீடர்களிடம் கூறினார்.’’ - (மாற்கு (9: 35-37)

‘‘ஆண்டவரிலே மகிழ்ச்சி கொள். உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு. அவரையே நம்பி இரு! அவரே உன் சார்பில் செயலாற்றுவார். கடவுளே நம் துன்பங்களை மகிழ்ச்சியாகவும், நம் கண்ணீரை சிரிப்பாகவும் மாற்றுவார். வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடு இரு. துன்பம் வரும்போது அடுத்து என்ன நடக்கும் என்பதைத்தெரிந்து கொள்ளா வண்ணம் இன்பத்தையும், துன்பத்தையும் மாறி மாறி வரவிடுபவர் கடவுளே. சர்வ வல்லமையுள்ளவர் கடவுள் என்பதை ஆழமாக நம்புவோம். பெறப்போகும் ஆசீர்வாதங்களை நன்றி சொல்லி ஏற்றுக்கொள்வோம், நல்வழியில் சென்றால் கடவுள் நம்மைப் பாதுகாப்பார் என்று நம்புவோம், பெறுவதைவிடக் கொடுப்பதில் மகிழ்ச்சியாக இருப்போம்!

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: