பெரம்பலூர்: வாலிகண்டபுரம் சேத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை யொட்டி நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்திலுள்ள சேத்து மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் செவ்வாயன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதியுலா நடந்து வந்தது. கடந்த 28ம் தேதி குதிரை வாகனத்தில் வீதியுலாவும், கரகாட்டமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று நேர்த்திக் கடன் மற்றும் வேண்டுதல் நிறைவேறியதற்காகவும் பக்தர்கள் அலகுகுத்தி ஊர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.