மதுரை: பாஜவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது தமிழ்நாடு மாநில மாநாடு மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் மாநாட்டு கொடியை ஏற்றினார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மதுரை எம்பி சு.வெங்கடேசன், அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டை துவக்கி வைத்து, சீதாராம் யெச்சூரி பேசியதாவது: பாஜ மீண்டும் ஆட்சியைப் பிடித்தது முதல் இந்துத்வா சித்தாந்தத்தை அமல்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசியல் அமைப்பின் மீது பல்வேறு நிலைகளிலும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். தன்னாட்சி அமைப்புகளான நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளது பாஜ அரசு. மேலும், மாநில உரிமைகளும் பறி போகும் நிலையில் உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒன்றியங்களால் ஆனதே இந்தியா என்பதை பாஜ ஏற்க மறுக்கிறது. இப்படியாகக் கூட்டாட்சி தத்துவமும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒன்றியம் என்பதை ஏற்க இந்த அரசு தயாராக இல்லை. இந்துத்வா சக்திகளுடைய நோக்கமான வன்முறையை போதிக்கின்ற வகையில் பகவத்கீதையை பாட புத்தகங்களில் கட்டாயப்படுத்தி அதன் மூலம் வன்முறையை மக்கள் மத்தியிலே ஏற்படுத்துவதற்கு பாஜ முயன்று வருகிறது. மதச்சார்பற்ற நாடு என்றால் ஏனைய மத நூல்களையும் பாட புத்தகத்தில் சேர்க்கலாமே? பாஜவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….
The post கூட்டாட்சி தத்துவத்தின் மீது தாக்குதல் பாஜவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் சீதாராம் யெச்சூரி அழைப்பு appeared first on Dinakaran.
