
2.8.2025-சனி ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு
இன்று ஆடி மாதம் விசாக நட்சத்திரம். விசாக நட்சத்திரம் என்பது நம்மாழ்வாரின் திருநட்சத்திரம். ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தை நம்மாழ்வாரின் அவதாரத் தலமான ஆழ்வார் திருநகரியில் அனுசரிப்பார்கள். நம்மாழ்வாருக்கு விசேஷ ஆராதனை நடைபெற்று
புறப்பாடும் நடைபெறும்.
3.8.2025-ஞாயிறு ஆடி பதினெட்டாம் பெருக்கு
ஆடியில் செய்யும் வழிபாடு கோடி பெறும். மிகப்பெரிய செல்வப் பெருக்கத்தையும், குடும்பத்தில் இன்பபெருக்கையும் வழங்கும். ஆடி பதினெட்டாம் பெருக்கு தமிழகப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பிரதி பிம்பமான விழா. ஆறுகளையும் ஆறுகளில் ஓடும் நீரையும் தெய்வமாக நினைத்துக் கொண்டாடி மகிழும் நாள் ஆடிப்பெருக்கு. ஆடிப்பெருக்கு திருநாளன்று பெண்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆறு கால்வாய் முதலிய நீர் நிலைகளுக்குச் சென்று, அந்த நீருக்கு முன்னால் விளக்கேற்றி வைத்து வாழை இலையில் படையல் இட்டு, தேங்காய் உடைத்து, கற்பூர தூபதீபங்கள் காட்டி, புது அரிசி வெல்லம் கலந்து வைத்து. சித்ரான்னங்களைப் படைத்து, குதூகலமாகக் கொண்டாடுவது உண்டு. அன்று நீர்நிலைகளுக்கு சீர் செய்வார்கள். வாழை மட்டையில் அகல் விளக்குகளை ஏற்றி நீரில் விடுவதும் சில இடங்களில் நடைபெறும். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அன்று தாலிக்கயிறு மாற்றிக்கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் திருமணமான பெண்களிடம் இருந்து வாங்கி மஞ்சள் சரடு அணிவதன் மூலமாக அவர்களுக்கும் மிக விரைவில் திருமணம் ஆகும். ஆறு, குளம் முதலியன, அருகே இல்லாதவர்கள் தங்கள் வீட்டில் போர் வெல் அல்லது அடி பம்பு இருந்தால் அந்தக் குழாயடியிலும் பூஜையைச் செய்யலாம். அல்லது ஒரு சிறுகுடத்தில் தண்ணீர் எடுத்து அதில் அரைத்த மஞ்சளைக் கரைத்து வைத்து படைக்கலாம். திருவரங்கத்தின் புகழ்பெற்ற அம்மா மண்டபம் என்கின்ற படித்துறை உள்ளது. அங்கே காவிரிக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் பெரிய கோயிலில் இருந்து நம் பெருமாள் யானை மீது புறப்பாடாவார். அம்மா மண்டபம் படித்துறைக்கு வருவார். அங்கு காவிரி நீரால் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும். அங்கே மாலை வரை பெருமாள் வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமான தாலிக் கயிறு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
4.8.2025-திங்கள் கலிய நாயனார் குருபூஜை
கலிய நாயனார் தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே எண்ணெய் எடுக்கும் வணிகர் மரபிலே தோன்றியவர். சிவ நெறியே தவநெறியாகக் கொண்டவர். திருவொற்றியூர் திருக்கோயிலில் தினமும் தாம் செக்கில் ஆடிய எண்ணெய் கொண்டு திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையைப் புலப்படுத்தத் திருவுளங்கொண்டான் சிவபெருமான். மிகவும் செல்வந்தரான இவருடைய செல்வத்தைக் குறைத்து வறுமை நிலையை உண்டாக்கினான். எல்லாம் நன்றாக இருக்கும் பொழுது பக்தி செலுத்துவது என்பது வேறு; எத்தனைத் துன்பங்களும் வறுமையும் சூழ்ந்த போதும் பக்தி செலுத்துவது என்பது வேறு. கலிய நாயனார் தன் வறுமையை நினைத்து கலங்கவில்லை. எல்லாம் சிவன் அருள் என்று எண்ணி தனது உறவினர்களிடம் உதவி கேட்டு விளக் கெரித்தார். அது சில காலம் மட்டுமே நடந்தது. எண்ணெய் தருவார் கொடாமையால் கூலிக்குச் செக்காடி அக்கூலி கொண்டு விளக் கெரித்தார். ஒரு கட்டத்தில் அந்தக் கூலியும் கிடைக்கவில்லை. தாம் வசித்த வீடு முதலிய பொருட்களை விற்று விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகரெங்கும் விலைகூறினார். வாங்குவாரில்லாமையால் மனம் தளர்ந்தார். திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்தார். “இன்று விளக்கேற்ற எண்ணெய் இல்லையே… நான் என் செய்வேன்? திருவிளக்குப் பணி தடைப்படின் நிச்சயம் இறந்துவிடுவேன்” எனத் துணிந்தார். எண்ணெய்க்கு ஈடாக தமது ரத்தத்தையே சொரிந்து விளக்கு ஏற்றுவதற்கு முனைந்தார். சோதனையின் இறுதிநிலை இது. இவரது மன உறுதியைக் கண்ட ஒற்றியூர்ப் பெருமானது அருட்கரம் இவரது செயலைத் தடுத்து நிறுத்தியது. உமை அம்மையோடு சிவபெருமான் விடைமீது தோன்றி அருளினார். சிவநெறியில் மன உறுதி கொண்ட கலிய நாயனாரின் குருபூஜை இன்று. ஆடி கேட்டை.
4.8.2025 திங்கள் கோட்புலி நாயனார் குருபூஜை
கோட்புலிநாயனார் சோழநாட்டிலே திருநாட்டியத் தான்குடியில் வேளாளர் மரபில் தோன்றினார். சோழ சேனாதிபதியாக வேலை செய்து வந்தார். பகை நாடுகளைப் போரில் வென்று புகழுடன் விளங்கினார். இதன் காரணமாக அரசாங்கத்தில் உயர் செல்வாக்குப் பெற்றவராக இருந்தார். அரசன் பல பரிசில்களை அவ்வப்போது இவருக்கு வழங்கினான். மிகப் பெரிய செல்வந்தராக விளங்கிய இவர் சிவனடியார்களுக்கு அமுது வழங்கும் பணியை பலகாலம் செய்துவந்தார். சிவன் கோயிலில் திருவமுதுபடி பெருகச் செய்யும் திருப்பணியும் இவர் பணி ஆகியது. அப் பொழுது அரசன் ஒரு போருக்காக இவரை அழைத்தான். தாம் திரும்பி வரும் வரையில் சிவனுக்கமுது படிக்காகும் நெல்லினைக் கூடுகட்டி வைத்துத், தம் சுற்றத்தாரை நோக்கி ‘இறைவர்க்கு அமுது படிவைத்துள்ள இந்நெல்லை யாரும் எடுத்தல் கூடாது. திருவிரையாக்கலி என்னும் ஆணை’ எனத் தனித்தனியே ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சென்றார். சில நாளிலே கடும் பஞ்சம் வந்தது. பசியால் வருந்திய சுற்றத்தார்கள் அரிசி மணி இல்லாது தவித்தனர். அப்பொழுது சிவனுக்கு அமுது செய்து விட்டு சேர்ந்திருந்த நெல் கோட்டை ஞாபகம் வந்தது. இறைவனுக்குரிய அந்த நெல்லை உபயோகித்து, பின்னால் திரும்ப தந்து விடலாம் என்று நினைத்து அந்த நெல்மணிகளை செலவழித்தனர். போர் நல்ல படியாக முடிந்தது ஊர் திரும்பிய நாயனார் தம்முடைய உறவினர்கள் செய்த செயலை எண்ணி கோபம் கொண்டார். அவர்களை தண்டிக்க நினைத்தார். தம்முடைய குலத்தார் அவ்வளவு பேரையும் தண்டித்தார். அப்போது இறைவர் வெளிப்பட்டார். தம்முடைய அருட்கருணை யினால் தண்டிக்கப்பட்ட அவ்வளவு பேரையும் உய்வடையச் செய்தார். கோட்புலியார் குருபூசைநாள்: ஆடிக் கேட்டை.
5.8.2025-செவ்வாய் ஏகாதசி
ஏகாதசி விரதத்தால் கிடைக்காத நற்பலன் எதுவுமில்லை. செல்வம், கல்வி, ஆயுள், ஆரோக்கியம், இழந்ததைப் பெறுதல், பதவி என, ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் ஏகாதசி விரதத்தால் கிடைக்கும். ஒருவருக்கு வெகு நாட்கள் குழந்தை இல்லை. அதன் காரணத்தை ஒரு முனிவரிடம் கேட்டான். அந்த முனிவர் சொன்னார். ‘‘அன்பனே! போன ஜென்மத்தில் வணிகராக இருந்தாய். பணத்தைத் தவிர வேறு நோக்கம் இல்லாதவனாக இருந்தாய். சுயநலமிக்க நீ ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தாய். ஒரு நாள் மதியம் ஒரு குளக்கரையை அடைந்தாய். அப்பொழுது மிகுந்த தாகத்தோடு ஒரு பசுவும் கன்றும் குளத்தில் நீர் அருந்திக்கொண்டிருந்தன. அப்பொழுதுதான் பசுவாயை நீரில் வைத் திருந்தது. உடனே நீ அங்கு ஓடிச் சென்று ஒரு பெரிய குச்சியால் அவைகளை அடித்து விரட்டிவிட்டாய். அந்த பாவமானது இப்பிறவியில் உன்னைப் பற்றி நிற்கிறது. ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியை முறைப்படி விரதமிருந்து, பகவான் மகாவிஷ்ணுவை வணங்கினால், நிச்சயம் அவர்களுக்குக் குறை தீரும்’’ என்றார். உடனே ஏகாதசி விரதத்தை மிகுந்த நம்பிக்கை யோடும் தூய்மையோடும் அந்த ஆசிரமத்திலேயே முனிவர் சொன்ன முறைப்படி துவங்கினான். அடுத்த சில மாதங்களில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஏகாதசி திதியில் இரவு முழுவதும் விழித்திருப்பார்கள். அந்த சமயத்தில் நாள் முழுவதும் விஷ்ணு பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். அடுத்த நாள் நிறைய காய்கறிகள் கூட்டு சேர்த்து செய்த உணவை படைத்து, மற்றவர்க்கும் அளித்து (துவாதசி பாரணை), சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
6.8.2025-புதன் ஆவணி மூலம், பிரதோஷம்
ஆவணி மூலம் நாளில், சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய பல்வேறு திருவிளையாடல்கள் நினைவுகூரப்பட்டு, விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது போன்ற லீலைகள் இந்த நாளில் கொண்டாடப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்தன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, சிறப்பாக நடைபெறுகிறது. இன்று பிரதோஷமும் அனுசரிக்கப்படுகிறது. தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். விஷத்தின் வீரியத்தினால் மயக்கமடைந்திருந்த சிவபெருமான் திரயோதசி நாளில் மாலை வேளையில் கண் விழித்தார். சிவ தரிசனம் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். பிரதோஷ காலங்களில் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவா பூஜை வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக் கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகல தோஷங்களும் தீரும்.
6.8.2025 புதன் சேலம் கோட்டை மாரியம்மன்
கோயிலில் பொங்கல் திருவிழாசேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகிறார்கள். மேலும், மாவிளக்கு எடுத்தல், அம்மனுக்கு அபிஷேகம் செய்தல், அன்ன தானம் போன்ற
நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
8.8.2025-வெள்ளி ஆளவந்தார் சாற்றுமுறை
நாதமுனிகளுக்கு பிறகு வைணவத்தை வளர்த்த ஆசாரியர்களின் முக்கியமானவர் ஆளவந்தார். அவருடைய அவதார தினம் ஆடி உத்திராடம். சகல திருமால் திருத்தலங்களிலும், வைணவர்களின் இல்லங்களிலும் ஆள வந்தார் சாற்றுமுறை மிகச் சிறப்பாக நடைபெறும். அவர் அவதரித்த காட்டுமன்னார் கோயிலில் பத்து நாள் உற்சவமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
8.8.2025-வெள்ளி பௌர்ணமி பூஜை
கருடன், ஏழு மலைகளை வைகுண்டத்தில் இருந்து பகவானுக்காக பெயர்த்து எடுத்து திருப்பதியில் வைத்தார். அங்கு பெருமாள், மந்திபாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்று கொண்டிருக்கிறான். வேதமாகிய கருடனைத் தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டான் “ஓடும் புள்ளேறி” என்றும், “பறவையேறும் பரமபுருடா” என்றும் ஆழ்வார்கள் இந்த கருட சேவையைப் போற்றுகின்றனர். இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும் கருடவாகனத்தில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். கருட வாகன சேவை முன்னிட்டு சர்வ அலங்கார திருக்கோலத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைவார். கருட வாகனத்தில் மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விஷ்ணு பிரியா
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.
