நத்தம் அருகே தண்ணீர் பாய்ச்சும் தகராறில் மோதல்: 2 பேர் கைது

நத்தம், ஜூன் 12: நத்தம் அருகே சொறிப்பாறைபட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (60), இவரது தம்பி பொன்னையா (55). இவர்களது பூர்வீக சொத்தில் நிலத்தை பிரித்து கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொன்னையாவின் தோட்டத்திற்குள் மாணிக்கம் அடிக்கடி தண்ணீரை பாய்ச்சியதாக கூறப்படுகிறது. இதனால் பொன்னையா சென்று என்னால் உழவு பணி பார்க்க முடியவில்லை. தண்ணீரை பாய்ச்ச வேண்டாம் என மாணிக்கத்திடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் பொன்னையாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த பொன்னையாவின் உறவினர்கள் மாணிக்கத்தை தாக்கியுள்ளனர். மாணிக்கம் தரப்பினரும் அவர்களை திருப்பி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணிக்கம், பொன்னையா சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் நத்தம் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் எஸ்ஐ தர்மர் வழக்குப்பதிவு செய்து மாணிக்கம் (60), ராஜ்குமார் (45) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post நத்தம் அருகே தண்ணீர் பாய்ச்சும் தகராறில் மோதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: