தமிழ்நாட்டில் மீண்டும் நல்லாட்சி தொடர முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனை துணை புரியும்: செல்வப்பெருந்தகை வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் நல்லாட்சி தொடர முதல்வர் மு.க.ஸ்டாலினின் 4 ஆண்டு சாதனை நிச்சயம் துணை புரியும். வளர்ச்சி பாதையில் தமிழகம் பீடு நடை போடுகிறது என்று செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2021ல், 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் சுமையோடு அதிமுக ஆட்சியை திமுகவிடம் விட்டுச் சென்றது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவிகிதமாக உயர்ந்து ஒன்றிய பாஜ அரசின் வளர்ச்சியான 6.5 சதவிகிதத்தை விட உயர்ந்து சாதனை படைத்திருக்கிறது.

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.17 லட்சத்து 23 ஆயிரம் என்றளவிற்கு உயர்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் தனிநபர் சராசரி வருமானம் 2024-25ல் ரூ.3.58 லட்சம். ஆனால், தேசிய சராசரி தனிநபர் வருமானம் ரூ.2.6 லட்சமாக குறைவாக இருக்கிறது. அந்த வகையில் நாடே போற்றுகிற வகையில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டு வருவதை பொருளாதார வல்லுநர்கள் பாராட்டுகிறார்கள்.

மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி புரிந்து வரும் தமிழ்நாடு முதல்வர் மேற்கொள்கிற சுற்றுப் பயணங்களில் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து அன்பையும், ஆதரவையும் பொழிந்து வருகிறார்கள். இதை சகித்துக் கொள்ள முடியாத பாஜ, அதிமுக போன்ற தமிழக விரோத கட்சிகள் காழ்ப்புணர்ச்சி அரசியலை செய்து வருகிறார்கள்.
இதை முறியடிக்கிற வகையில் திமுக தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கட்டுக்கோப்பாக ஒருமித்த கொள்கை பற்றோடு செயல்பட்டு வருகின்றன. 2026ல் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி தொடரும்.

 

The post தமிழ்நாட்டில் மீண்டும் நல்லாட்சி தொடர முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனை துணை புரியும்: செல்வப்பெருந்தகை வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: